சித்த
வைத்தியத்தின் மூலம் எச்ஐவி, எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்று பல பரம்பரை மருத்துவர்கள், பட்டம் பெற்ற மருத்துவர்கள் அவ்வப்போது சொல்லி வருகின்றனர். ஆங்கில மருத்துவமான அலோபதி படித்த டாக்டர்கள் சிலரும் இதனை ஆதரிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் மருத்துவமனையில் எச்ஐவி, எய்ட்ஸ் இருந்தவர்களுக்கு ஆங்கில மருந்துடன், சித்த மருந்துகளும் கொடுக்கப்பட்டன. ஏப்பு நோய் என்று அந்தக் காலத்திலேயே இருந்ததாகவும், எனவே எய்ட்ஸ்க்கு சித்த வைத்தியத்தில் மருந்துகள் இருக்கின்றன என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எய்ட்ஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து இருப்பதாக விளம்பரம் செய்தால், அது சட்டப்படி குற்றம் என்பது மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை.
எச்ஐவி உள்ளவர்களுக்கு எம்டிஆர்&டிபி (மல்டி டிரக் ரெசிஸ்டென்ட் & டிபி) காசநோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் இருக்கின்றன என்கின்றனர். இணைய தளத்திலும் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. அலோபதி மருத்துவர்கள மறுக்கின்றனர். சித்த மருத்துவர்களை கேட்டால், ‘அலோபதி மருத்துவம் மட்டுமே சிறந்தது என்ற மனநிலை பலரிடம் உள்ளது. அதுமட்டுமல்ல வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகளின் வியாபாரத்திற்காக இந்திய மருத்துவ முறைகளுக்கு தடை போடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.
783 எச்ஐவி மையங்கள்
20 லட்சம் சோதனைகள்
தமிழகத்தில்தான்
783 பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 20 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இம்மையங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் செயல்படுகின்றன.
தமிழகம்
முழுவதும் 106 பால்வினை நோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. 37 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 44,126 பேர் இவற்றில் பதிவு செய்துள்ளனர். அதில் 41,700 நபர்கள் தொடர்ந்து மருந்துகள் பெற்று வருகின்றனர். இம்மருந்துகள், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
என்ஜிஓக்கள்
மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மூலமாக 38 மையங்கள் (பெண்களுக்கென 5 மையம் உள்பட) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 84 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில்
39 சமூக நல மையங்கள் உள்ளன. இங்கு எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இலவச சிகிச்சை பெற வசதிகள் உள்ளன. இதன்மூலம் ஒரு நாளைக்கு 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில்
முதன்முறையாக எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை, முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1295 குழந்தைகளுக்கு ரூ.44 லட்சம் செலவில் உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர்
சுயஉதவிக் குழுக்கள் மூலம் எச்ஐவி விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 12 மாவட்டங்களில் 13 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயிற்சி பெற்றுள்ளனர்.
எய்ட்ஸ்
விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக செஞ்சுருள் சங்கம் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது 14 பல்கலைக்கழகங்களில் 1007 கல்லூரிகளில் இச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 57 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தியாவில் முதன் முதலாக (1986ல்) தமிழகத்தில் தான் எச்ஐவி இருப்பவர் கண்டுபிடிக்கப்பட்டார். முதன் முதலில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தொடங்கப்பட்டதும் தமிழகத்தில்தான். நாட்டில் அதிகமாக எச்ஐவி பரிசோதனை மையங்கள் (783) தொடங்கப்பட்டதும் நமது மாநிலத்தில்தான்.
எய்ட்ஸ் விஷயத்தில் இப்படி சில சிறப்புகளை பெற்றுள்ள தமிழகத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் எப்படி நடக்கின்றன? எங்கிருந்தோ வரும் கோடிக்கணக்கான நிதி முறையாக செலவிடப்படுகிறதா? மர்மம் நிறைந்த இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (டான்சாக்ஸ்) அளித்த பதில் இதோ...
மாநிலம் முழுவதும் 55 தொண்டு நிறுவனங்களை (என்ஜிஓ) தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை டான்சாக்ஸ் செயல்படுத்தி வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கை யாளர்கள், போதை ஊசி பரிமாறிக் கொள்பவர்கள், அரவாணிகள், வேலைக்காக இடம் பெயர்பவர்கள், லாரி ஓட்டுனர்கள் மத்தியில் எச்ஐவி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியை இந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
பரவலாக்க முறை மூலமும், மாவட்ட நிர்வாகங்களின் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் வகுத்துள்ள வரையறைப்படி, தேர்வுக்குழு மூலம் வெளிப்படையாக தேர்வு செய்யப் படுகின்றன.
தேர்வு செய்யப்படும் என்ஜிஓக்களின் பணிகள், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்படுகிறது. செயல்பாடு குறைந்தால், தேர்வு ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட நிறுவனமாக அறிவிக்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அரசு வழங்கும் நிதி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தணிக்கை செய்யப்படும். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், மறுநிதி வழங்கப்பட மாட்டாது.
அனைத்து நிதியையும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்குகிறது. எய்ட்ஸ் பணிக்கு தேவையான நிதியை பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. அது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.75 கோடி தரப் படுகிறது.
இந்த நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு செய்கிறது. உலக வங்கி மற்றும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
எண்ணிக்கை குறைய நிதி
எச்ஐவி,
எய்ட்ஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறையவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும், அதற்கான ஆராய்ச்சிகள் செய்யவும் உலக வங்கி உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனங்களான யுஎஸ்எய்ட், கிளிண்டன் அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை முக்கியமானவை. எச்ஐவி, எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், சிகிச்சைக்காகவும் இந்நிதியை பயன்படுத்துகின்றனர். மொத்த நிதியில் 75 சதவீதம், விழிப்புணர்வு உள்ளிட்ட தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தப் படுகின்றன. எஞ்சிய 25 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், சிகிச்சைக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
வருவது தெரியும்; போவது மர்மம்!
கோடி கோடியாய்...
புறக்கணிப்புகளால் நிகழும் தற்கொலைகள்
சமூகத்தாலும்,
மருத்துவத் துறையினராலும் நடத்தப்படும் புறக்கணிப்பு களால் எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகள் தற்கொலை செய்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த தற்கொலைகள் சில நேரங்களில் மருத்துவமனைகளிலும் நிகழுகின்றன. இதனை வயிற்றுவலி, எச்ஐவி கண்டுபிடிக்கப்பட்டதால் மனமுடைந்த தற்கொலை என்று சாதரணமாக முடித்து விடுகின்றனர். குடும்பத்தினரும் பெரிதுபடுத்துவதில்லை.
அதேபோல் சிறைக் கைதிகள் யாருக்காவது எச்ஐவி, எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால் அதை பரபரப்பு செய்தியாக்கி பலர் குளிர் காய்கின்றனர். நோய் குறித்து சரியான புரிதல் இல்லாததால் சம்பந்தப்பட்டவரும், அவர் குடும்பத்தினரும் அவமானப்பட நேரிடுகிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த எச்ஐவி நோயாளி ஒருவர் கூறுகையில், ‘‘புற்றுநோய், சர்க்கரை நோய் என ஏதாவது நோய் இருந்தால், அதை வெளியில் சொல்ல தயங்குவதில்லை. பத்திரிகைகளும் பரபரப்பாக்குவதில்லை. ஆனால் எச்ஐவி, எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால் பத்திரிகைகள், முகம் தெரியாத, ஊர் அறியாதவராக இருந்தாலும் செய்தியாக்கி விடுகின்றனர். மற்ற நோய்களை போல் இதையும் ஒரு நோயாக கருதினால், நாங்கள் அவமானப்படுவது குறையும். வெளியில் சொல்ல தயக்கம் இருக்காது. மக்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும்’’ என்றார்.
கிராம
மக்களுக்கும், குப்பங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுவதுண்டு. இந்தக் கூட்டங்கள், அந்த ஏழை எளிய மக்கள் எட்டிப் பார்க்க முடியாத நட்சத்திர ஓட்டல்களில் ஏசி அரங்குகளில்தான் நடக்கும். ஊர் ஊராக, குப்பம் குப்பமாக போய் நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையெல்லாம் புள்ளிராஜவும், தில்லுதுரயும் பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது ஒரு குக்கிராமத்தில் போய் ‘எய்ட்ஸ்’ குறித்து கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனாலும் தொண்டு நிறுவனங்களும், சங்கங்களும் இன்னும் ஏசி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
எல்லாம் ஏசி ஓட்டலில்தான்...
யாருக்கு அதிக பங்கு?
எச்ஐவி
உள்ளவர்களுக்காக மற்றவர்கள் நடத்தும் சங்கங்களில் வருவாய்க்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால், எச்ஐவி உள்ளவர்கள் நடத்தும் சங்கங்களிலும் இதே நிலைமைதான். காரணம் மட்டும் வேறு. தொண்டு நிறுவனங்களில் யாராவது ஒருத்தர்தான் உரிமையாளராக இருப்பார். இந்த சங்கங்களில் நிர்வாகிகளுக்கு இடையில் இருக்கும் ஜனநாயகம் அடிக்கடி சண்டையாக மாறி விடுகிறது. சென்னையில் உள்ள எச்ஐவி உள்ளோருக்கான சங்கம் ஒன்றில் யாருக்கு அதிக பங்கு என்பதில் அடிதடி நடந்துக் கொண்டிருக்கிறதாம். பிரச்னை விரைவில் வெடிக்கலாம் என்கிறார்கள்.
எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாக மத்திய, மாநில சுகாதாரத் துறைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் சுமார் 25 லட்சம் பேர் எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளவர்கள். இதில் 2.5 லட்சம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது 10 சதவீதம் பேர் நமது ஊர்க்காரர்கள். இது இந்த ஆண்டு தொடக்கத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தெரிவித்த தகவல்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget