ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள். ராகு, கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. அவர்கள் செய்த தவ வேள்விகளுக்கு மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும் நவக்கிரக பரிபாலனத்தில் இடம்பெறும் பாக்யத்தை அவர்களுக்கு தந்தனர்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம்பெறும். இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற 7 கிரகங்கள் போல ராகு, கேதுக்கு சொந்த வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவை கிடையாது. ஆனாலும், இவர்களுக்கு உச்ச வீடு இருப்பதாக சில ஜோதிட நூல்களில் ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு. பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு, கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்துக்கு 9ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.
மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க, டாக்டர் துறையில் புகழ் பெற, சிறப்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள, ஸ்கேன் சென்டர், மெடிக்கல்ஸ் வைக்க, இத்தொழில்கள் சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் இந்த துறையில் முன்னேற முடியாது.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியம்.
10ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறைகளில் முன்னேறலாம். செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம். சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகள் அமையும். இசை துறையில் ஆழ்ந்த அறிவும் பெயரும் புகழும் கிடைக்க இசைஞானி என்று சொல்லக்கூடிய கேதுவின் அருள் வேண்டும். லக்னத்துக்கு 12&ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகருக்கு மறுபிறவி கிடையாது என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது சேர்க்கை மிக முக்கிய அம்சம். இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ், அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கம் இருந்தும் குவியும்.
ராகு: வழிபாடு, பரிகாரம்
ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும். சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது நல்லது. புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.
‘ஓம் ஸூக்தந்தாய வித்மஹே
உக்ர ரூபாய தீமஹி
தந்நோ ராகு பிரசோதயாத்’ என்ற ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் காத்யானாய வித்மஹே
கன்யாகுமாரீச திமஹி
தந்நோ துர்க்கே பிரசோதயாத்’ என்ற துர்க்கை காயத்ரி மந்திரத்தை ராகு திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு.
கேது:வழிபாடு, பரிகாரம்
கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவஸ்தலம் காளஹஸ்தியில் கேதுவுக்கு ஹோம பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.
‘ஓம் சித்ரவர்ணாய வித்மஹே
சர்ப்ப ரூபாய தீமஹி
தந்நோ கேது பிரசோதயாத்’ என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் ஏக தந்தாய வித்மஹே
 தந்தி பிரசோதயாத்’ என்ற விநாயகர் காயத்ரி மந்திரத்தை கேது திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு.
நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்பவர்களுக்கும் தான் மட்டுமல்லாமல் இந்த உலகமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உள்ளம் கொண்டவர்களுக்கும் நற்பயன்கள், பல்வேறு யோகங்கள், அதிர்ஷ்டங்களை வாரிவழங்க நவக்கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நற்காரியங்களை செய்து அவர்களது அனுக்ரகம் பெறுவோமாக.

1 comments:

  1. Wonderful article.
    This blog is very nice..

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget